சாமுவேல் பிஸ்க் கிறீன்

சாமுவேல் பிஸ்க் கிறீன்               


சாமுவேல் பிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green, அக்டோபர் 10, 1822 - மே 28, 1884) என்பவர் அமெரிக்க வைத்தியரும் கிறிஸ்தவ மத ஊழியருமாவார். இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்க மிஷன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர். மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் இவர் வெற்றி கண்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

அமெரிக்காவின் மசச்சூசெட் மாநிலத்தின் வூஸ்டர் (Worcester) நகரில் வில்லியம் கிறீன், ஜூலியா பிளிம்ப்டன் தம்பதியினரின் பதினொரு பிள்ளைகளில் எட்டாவதாகப் பிறந்தவர் சாமுவேல். பதினொரு வயதிலேயே தாயை இழந்த இவர் தந்தையாரினதும் மூத்த சகோதரியினதும் பராமரிப்பில் வளர்ந்தார்.

18 வயதில் கிறிஸ்துவின் சேவைக்குத் தம்மை அர்ப்பணித்தார். 1841 இல் நியூ யோர்க் மருத்துவக் கல்லூரியில் (The College of Physicians and Surgeons of New York) இணைந்து 1845 இல் மருத்துவராக வெளியேறினார்.

யாழ்ப்பாணத்தில் சேவை
யாழ்ப்பாணத்திலே தமது மிஷனரிச் சேவையை ஸ்திரப்படித்திய அமெரிக்க மிஷன், மருத்துவ சேவையையும் துவங்குவதென 1819 இல் தீர்மானித்தது. அதன்படி 1820 இல் பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் டாக்டர் ஸ்டேர் தலைமையில் நிறுவப்பட்டது. அவரைத் தொடர்ந்து டாக்டர் நேதன் உவாட் பணியாற்றினார். உவாட்டின் சேவைக் காலம் முடிவடைய வந்து பணியை ஏற்றவர் தான் டாக்டர் சாமுவேல் கிறீன். சமயப் பணிக்காகவும் கிறிஸ்தவ மத போதனைக்குமென வந்த மிஷ்னரிமார் சமூக சேவையும் மனிதாபமான வழிகளையும் தொடர்ந்தார்கள்.

நீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847 ஒக்டோபர் ஆறாம் திகதி பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியை ஆரம்பித்துப் பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். மானிப்பாயில் மருத்துவ நிலையம் ஒன்றை ஆரம்பித்து அங்கு பணி புரியத் தொடங்கினார். அங்குதான் கிறீனின் சாதனை யாவும் இடம்பெற்றன. அம்மருத்துவ மனை இன்று மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனை என அழைக்கப்படுகின்றது.

தமது பத்தாண்டுச் சேவை முடிந்தபின் அமெரிக்கா திரும்பி ஓய்வுபெற்ற கிறீன், திருமணஞ் செய்துகொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பி, தமிழில் மருத்துவங் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தார்.
                                                                           தமிழில் மருத்துவக் கல்வி

மருத்துவக்கல்வியை மானிப்பாயிலே தமது கல்லூரியில் தமிழில் கற்பதென்று 1855 ஆம் ஆண்டிலேயே தீர்மானித்தார். அப்போது மாணவர் சிலர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என உணர்ந்தார். அவ்வேளையிலே தமது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.

"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்".

இவ்வண்ணம் உறுதியாகக் கூறிய கிறீன், தமிழில் மேனாட்டு மருத்துவதைத் துவங்கிய முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார்.

தமிழருக்கான மருத்துவ ஊழியர்

தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர்" (Medical Evangelist to the Tamils) என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் டாக்டர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவு படுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது.

வெளியிட்ட நூல்கள்
டாக்டர் கிறீன் அவர்கள் மொத்தம் 24 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார். அவற்றில் சில:
கட்டரின் அங்காதிபாதம், சுகரணம் - Cutter's Anatomy, Physiology and Hygiene, 204., 1857
மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் - Maunsell's Obstetrics, 258., 1857
துருவிதரின் இரணவைத்தியம் - Druitt's Surgery, 504., 1867
கிறேயின் அங்காதிபாரதம் - Gray's Anatomy, 838., 1872
மனுஷ சுகரணம் - Dalton's Physiology, 590., 1883
வைத்தியாகரம் - (1872)
கெமிஸ்தம் - Well's Chemistry, 516.,1875
வைத்தியம் (1875)
கலைச் சொற்கள் (1875)